பொன்மொழிகள்

தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அயலாரால் நேர்ந்த கேடுகளைத் தடுக்க இனவொற்றுமை யில்லாது போனதே கரணியம்.

வாழ்க்கைச் சுருக்கம்

    தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே
    தமிழுயரத் தானுயர்வான் தான்.
                                                 - பாவாணர்

        தன்னலம் சிறிதுமின்றி, குலமத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த மொழிப் பேரறிஞர்தான் ‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படும் ஞா. தேவநேயப் பாவாணர்.

        “தேவமொழியென்று ஏமாற்றித் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ்மொழி தாழ்ச்சியடைந்தது; அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். எனவே, தமிழன் மீண்டும் முன்னேற வேண்டுமானால், தமிழ்மொழி வடமொழியினின்று விடுதலையடைதல் வேண்டும்” என்று எண்ணினார் பாவாணர். வடமொழியினின்று தமிழை மீட்பதே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகவும் கருதினார். தமிழ், தமிழர் நலம் காப்பதையே தமது உயிர் மூச்சாகக் கொண்டார்.

        பாவாணர் ஏன் தமிழினத்தைக் காக்க முன்வந்தார் என்பதற்கான கரணியத்தைக் காண்போம். பாவாணர் ஒருமுறை திருப்பனந்தாள் மடத்திற்குச் சென்றிருந்தார். அங்குப் பாவாணரும் வேறு சில தமிழரும் விடுதித் தாழ்வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கெல்லாம் தங்குவதற்கு உள்ளே அறைகள் கொடுக்கப்பட்டிருந்தது மல்லாமல், நண்பகல் உணவு பிராமணர்க்கு முதலில் பரிமாறப்பட்ட பின்னரே தமிழர்க்குப் பிற்பகல் மூன்று மணிக்குப் பரிமாறப்பட்டது. காலத்தாழ்வு ஏற்பட்டதைக் குறித்து வினவியபோது, அங்குள்ளோர் அப்போதுதான் பிராமணப் பந்தி முடிந்ததென்று தெரிவித்துள்ளனர். அப்போது, பாவாணர் தமிழர் குமுகாயம் அந்த அளவிற்குத் தாழ்ந்துபோன நிலை கண்டு, மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். “நாடு தமிழ்நாடு; மடம் தமிழர் மடம்; சமயம் தமிழர் சமயம்; பணம் தமிழர் பணம்;” அங்ஙனமிருந்தும், தமிழன் நாய் போல் நடத்தப்படுவது இன்றும் தொடர்கின்ற தென்றால், தமிழனைப் பிராமண அடிமைத் தனத்திலிருந்து மீட்டே ஆக வேண்டுமென்று மனம் குமுறுகின்றார் பாவாணர். தமிழனை மீட்கும் பணியிலும் ஈடுபடுகின்றார்.

        “தமிழை வடமொழியினின்றும் தமிழனை ஆரியனிடமிருந்தும் மீட்க வேண்டும். அதற்காகவே ஏறத்தாழ அறுபதாண்டு காலமாக மொழியாராய்ச்சியில் ஈடுபட்டேன். தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்ற உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கு இல்லை. இதற்காகவே இறைவன் என்னைப் படைத்தார்” என்று உரைக்கின்றார் பாவாணர்.

        ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் ஆரியருக்கு அடிமைகளாக இருக்கிறோமே என்று எண்ண வேண்டாமா? நமக்குத் தன்மான உணர்வு வேண்டாமா? நம் தமிழ்நாட்டில் ஆரியன் புகுந்து தமிழனை அடக்கி யாளும் இந்த நிலைமை எப்போது மாறும்? இவையெல்லாம் பாவாணர் உள்ளத்தில் எழுந்த வினாக்கள்.

        கால்டுவெல் பெருந்தகை தமிழின் தொன்மையை உலகுக்கு அறிவித்தார். பரிதிமாற் கலைஞர் தனித்தமிழுக்கு வித்திட்டார். மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கி, செடியாகத் தழைக்கச் செய்தார். அதனை மரமாக வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப் பாவாணர் ஒருவரே.